22] உறுதி செய்யும் நபித்தோழர்களின் நடைமுறை
இந்நபி மொழியை உறுதி செய்யும் நபித்தோழர்களின் நடைமுறை.
வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறும் இந்நபி மொழியை நபித்தோழர்களின் நடை முறைகளும் உறுதி செய்கின்றன.
நபித் தோழர்களின் நடைமுறை எவ்வாறு இருந்தது என்பதை அறியும் முன், நபி(ஸல்)அவர்களின் ஆட்சி காலத்திலும், நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலத்திலும் ஜகாத் வழங்கும் முறை எவ்வாறு நடைமுறையில் இருந்தது என்பதை சற்று அறிந்து கொள்வோம்.
நாம் தற்காலத்தில் ஜகாத் வழங்கி வருவது போன்று ஒவ்வொருவரும் தங்கள் விருப்பம் போன்று தனித்தனியாக ஜகாத் வழங்க அப்போது அறவே அனுமதி இல்லை. மாறாக, ஆட்சித் தலைவர் இதற்கென ஆட்களை நியமனம் செய்து, அவர்கள் மூலம் ஜகாத்தை மொத்தம் திரட்டி அதற்குரிய வழிகளில் (பார்க்க:9:60 வசனம்) வினியோகம் செய்வதே சட்டமாக இருந்து வந்தது. அதாவது ஜகாத்தை வசூலித்து, வினியோகம் செய்வது அரசின் கடமைகளில் ஒன்றாகவே இருந்து வந்தது.
இறைத்தூதர் மற்றும் நபித்தோழர்கள் ஆகியோரின் ஆட்சி காலங்களில், ஜகாத் வசூல் எவ்வாறு நடை பெற்றது? ஒரு மணிக்கு ஒரு தடவையா? தினமும் ஒரு தடவையா? வாரம் ஒரு முறையா? மாதம் ஒரு முறையா? வருடம் ஒரு முறையா? என அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இஸ்லாமியச் சட்டங்களுக்கு செயல் வடிவம் தந்த முதல் சமுதாயம் நபித்தோழர்கள்தான். அவர்களது நடைமுறைகள் சில சட்டங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கமாக அமையும்.
இறைத்தூதர் மற்றும் நபித்தோழர்களின் காலத்தில் ஜகாத் வசூல்:
7151 وأخبرنا محمد بن موسى بن الفضل ثنا أبو العباس(محمد بن يعقوب) أنبأ الربيع (بن سليمان بن عبد الجبار المرادي أبو محمد المصري) أنبأ الشافعي أنبأ إبراهيم بن سعد عن بن شهاب قال إنّ أبا بكر وعمر رضي الله عنهما لم يكونا يأخذان الصدقة مثناة ولكن يبعثان عليها في الجدب والخصب والسمن والعجف لأن أخذها في كل عام من رسول الله صلى الله عليه وسلم سنة. رواه البيهقي واللفط له وإبن أبي شيبة ومسند الشافعي .( صحيح الإسناد)
இப்னு ஷிஹாப் கூறுகிறார்:
"அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும், (இரு வருடத்திற்குரிய) ஜகாத்தை (ஒரே வருடத்தில்)இரட்டிப்பாக்கி எடுப்பதில்லை. மாறாக, செழிப்பான காலத்திலும் வறட்சியான காலத்திலும் (ஒவ்வொரு வருடத்திற்குரிய) ஜகாத்தினை (அந்த ஆண்டிலேயே) வசூலிப்பதற்காக (ஆட்களை) அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில், ஒவ்வொரு வருடமும் அதனை வசூலிப்பது இறைத்தூதர் ஏற்படுத்திய வழிமுறையாகும்." (பைஹகி, முஸன்ஃப் இப்னி அபீ ஷைபா. முஸ்னத் ஷாஃபி. (குறைகூற முடியாத சரியான அறிவிப்பாளர்கள் தொடரைக் கொண்ட செய்தியாகும்.)
"மதீனாவில் ஆட்சி புரிந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரில் யாரும் (இருவருடத்திற்குரிய) ஜகாத்தை (ஒரே வருடத்தில்) இரட்டிப்பாக்கி வசூலித்ததாக யாரும் அறிவிக்கவில்லை. மாறாக ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பி (வசூலித்துக்) கொண்டிருந்தார்கள்" என முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா என்ற ஹதீஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
முதல் மூன்று கலீஃபாக்களின் ஆட்சி காலத்திலும் ஜகாத்தை வருடா வருடம் வசூலித்து வந்துள்ளார்கள். இது அவர்களாக எடுத்துக் கொண்ட முடிவல்ல. இறைத்தூதர் காட்டிய வழி முறையின் அடிப்படையில்தான் இதை செயல்படுத்தி வந்தார்கள் என்பதை இச்செய்தியின் இறுதியில் இடம் பெற்ற (ஒவ்வொருவருடமும் அதை வசூலிப்பது இறைத்தூதர் ஏற்படுத்திய வழி முறையாகும்) என்ற வாசகமும் உறுதிப்படுத்துகிறது.
ஜகாத்தை வசூலிப்பதற்கு இறைத்தூதர் ஆட்களை அனுப்பி வைத்த செய்தி எல்லா ஹதீஸ் நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதை இறைத்தூதர் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அனைவரும் அறிந்தே இருப்பர். அதைத் தான் மேற்கண்ட செய்தி உறுதிப்படுத்துகிறது. மேலும், மாபெரும் இமாமான ஷாஃபி அவர்களின் அர்ரிசாலா என்ற நூலிலும், இப்னு ஹஸ்ம் அவர்களின் அல்முஹல்லா என்ற நூலிலும் இடம் பெற்றிருக்கும் செய்திகளும் இதையே உறுதிசெய்கின்றன.
ثم كان مانقلت العامة عن رسول الله e في زكاة الماشية والنقد أنه أخذها في كل سنة مرة.. (الرسالة للإمام الشافعي)
"கால்நடை மற்றும் நாணயங்களின் ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வசூலித்துள்ளார்கள் என்பதை இறைத்தூதரிடமிருந்து (நபித்தோழர்கள்) அனைவரும் கூறியுள்ளனர்." (அர்ரிசாலா)
قال أبو محمد( إبن حزم)... قد ثبت أن رسول الله كان يبعث المصدقين في كل عام لزكاة الإبل, والبقر, والغنم. هذا أمر منقول نقل الكافة.(المحلى)
"ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது. (அல்முஹல்லா பாகம்:6 பக்கம்:28)
"வருடா வருடம் ஜகாத்தை வசூல் செய்வது இறைத்தூதர் ஏற்படுத்திய வழிமுறையாகும்" என்ற செய்தியும், நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் வருடா வருடம் ஜகாத் வசூலித்து வந்தார்கள் என்ற செய்தியும் அபூதாவூதில் இடம் பெற்ற "வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும்" என்ற நபி மொழியை உறுதிப்படுத்துகிறது.
மேலும், நிஸாப் அளவு செல்வம் ஒருவனிடம் இருந்தால் அவன் மீது உடனே ஜகாத் கொடுப்பது கடமை இல்லை. ஒரு வருடம் கழித்து கொடுப்பதே கடமை என்பதும் இங்கே புரிந்து கொள்ளப்படுகிறது.
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளின் மூலம், குறிப்பிட்ட(நிஸாப)ளவு செல்வம் வைத்திருப்பவர் வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படுகிறது.
கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்கிய நபித்தோழர்கள்.
ஒரு பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்று குர்ஆனில் அல்லது நபி மொழியில் கூறப்பட்டுள்ளதா? என கேட்கும் புத்திசாலிகளின்(!) கவனத்திற்கு.
குர்ஆனையும் நபி மொழியையும் சரியாகப்புரிந்து அதனை அப்படியே நடை முறைப்படுத்துவோரில் முதலிடம் வகிப்போர் நபித்தோழர்கள்தான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. காரணம் குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்ளுக்கு உடனுக்குடன் இறைத்தூதரிடம் விளக்கங்களை நேரிடையாகக் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டவர்கள். எனவே, ஒட்டு மொத்த நபித் தோழர்களும் ஒரு ஹதீஸை எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அது போன்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களைவிடவும் நாம்தான் சரியான விளக்கம் அளிப்போம். ஒட்டு மொத்த நபித்தோழர்களும் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என ஒருவர் கூறினால், அது அவரது அறிவீனமாகும்.
இவ்வுண்மையைப் புரிந்து கொண்டு 'ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்க வேண்டும்' என்ற நபி மொழியை நபித்தோழர்கள் எவ்வாறு செயல்படுத்தி வந்தார்கள் என்பதை அறிந்து கொள்வோம். இது ஜகாத் பற்றிய இப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வாக அமையும்.
நபித் தோழர்கள் தவறாகவும் புரிந்து கொள்வார்கள் என சம்பந்தமில்லாத சில உதாரணங்களைக் காட்டி, பொத்தாம் பொதுவாக பேசிவரும் சிலர், தாம் புரிந்து கொள்வதில் தவறே ஏற்பாடாதது போல் நடந்து கொள்கிறார்கள். அதனால், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது, அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை இவர்களுக்கு ஏற்படுவதில்லை. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
மனிதர்கள் என்ற அடிப்படையில் நபித் தோழர்களுக்கும் தவறுகள் ஏற்படும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஒட்டு மொத்த நபித் தோழர்களும் ஒரு விஷயத்தை தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்பதை ஒருவரும் ஏற்க மாட்டர்.
இப்னு உமர் அவர்கள்:
أخبرنا سفيان عن أيوب عن نافع عن بن عمر ثم أنه كان يزكي مال اليتيم(رواه الشافعي في مسنده)
நாஃபி அவர்கள் அறிவிக்கிறார்:
இப்னு உமர் அவர்கள் அனாதைகளின் செல்வத்தில் தொடர்ந்து ஜகாத் வழங்கி வந்தார்கள். (நூல்: முஸ்னத் ஷாஃபி.)
عن ابن جريج قال أخبرني موسى بن عقبة عن نافع أن عبد الله بن عمر كانت تكون عنده أموال اليتامى .... يخرج زكاتها كل عام من أموالهم.(عبد الرزاق)
நாஃபி அவர்கள் அறிவிக்கிறார்:
அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் வசம் அனாதைகளின் செல்வம் இருந்து வந்தது........ அவற்றில் ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்கி வந்தார்கள். (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்).
அனாதைகளின் செல்வத்தில் வருடா வருடம் இப்னு உமர் ஜகாத் கொடுத்து வந்த செய்தி சாலிம் என்பவரின் மூலம் முஸன்னஃப் இப்னி அபீ ஷைபாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ஜகாத் வழங்குவது பொருளாதாரத்தை தூய்மைப்படுத்துகிறது என புகாரியில் இடம் பெற்ற செய்தியை கூறியவர் இவர்தான். அவ்வாறு கூறியவரே, திரும்ப திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான் புரிந்து, அதனைச் செயல்படுத்தி வந்துள்ளார் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இப்னு உமர் கூறியதில் தங்களுக்கு சாதகமானதை மட்டும், எடுத்துக் கொண்டு தம் கருத்துக்கு எதிரானதை புறக்கணிப்பது பச்சோந்தி தனம் என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது?
ஆயிஷா (ரலி) அவர்கள்:
أخبرنا سفيان عن يحيى بن سعيد عن القاسم بن محمد يقول: كانت عائشة تزكي أموالنا ونحن أيتام في حجرها.رواه البيهقي ومسند الشافعي والمحلى عن طريق أحمد بن حنبل.
عن مالك عن عبد الرحمن بن القاسم عن أبيه أنه قال كانت عائشة تليني وأخا لي يتيمين في حجرها فكانت تخرج من أموالنا الزكاة رواه مالك
காசிம் பின் முஹம்மது அவர்கள் கூறுகிறார். "நாங்கள் ஆயிஷா அவர்களிடம் அனாதைகளாக வளர்ந்து வந்தோம். எங்களின் செல்வத்தில் ஆயிஷா அவர்கள் தொடர்ந்து ஜகாத் வழங்கி வந்தார்கள். (பைஹகி, அல் முஹல்லா, முஸ்னத் ஷாஃபி, முஅத்தா மாலிக்).
இப்னு உமர் (ரலி), அன்னை ஆயிஷா (ரலி) ஆகியோர் அனாதைகளின் செல்வத்தில் தொடர்ந்து ஜகாத் வழங்கி வந்துள்ளனர் என்பது நம்பகமானவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். தொடர்ந்து வழங்குவது என்றால், கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வழங்கினார்கள் என்று தானே அர்த்தம். ஏனெனில் அனாதைகளின் செல்வத்தில் புதியது வர வாய்ப்பில்லை. தன் கைவசம் இருந்து வந்த பொருளுக்குத்தான் திரும்பத் திரும்ப ஜகாத் வழங்கி வந்துள்ளனர். இப்னு உமர் பற்றிய ஒர் அறிவிப்பில் 'ஒவ்வொரு வருடம்' என்ற மிகத் தெளிவான வார்த்தை இடம் பெற்றுள்ளது.
உமர் உட்பட பல நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைத்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்ற நபி மொழியை, ஒரு பொருளுக்கு மீண்டும் மீண்டும் வழங்க வேண்டும் என்று புரிந்துதான் செயல்படுத்தி வந்துள்ளார்கள்.
ஒரு பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்குவது குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானது என்றிருந்தால், இறைத்தூதரின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற ஆசை கொண்ட இப்னு உமர், ஆயிஷா ஆகியோர் தம்மிடம் வளர்ந்த அனாதைகளின் செல்வத்தில் தொடர்ந்து ஜகாத் வழங்கி அவர்கள் ஏழையாகிட (இவர்களின் கருத்துப்படி) காரணமாக இருக்கமாட்டார்கள்.
இந்த நபித்தோழர்கள் செயல் படுத்தியது அவர்களின் சொந்தக் கருத்து. அதனை ஏற்க முடியாது என்றெல்லாம் தட்டிக் கழிக்கவும் முடியாது. மார்க்கத்தில் புதிய ஒரு சட்டத்தை தன் சுய விருப்பப்படி உண்டாக்கி அதை செயல்படுத்தக் கூடியவர்களல்லர் நபித்தோழர்கள். தங்களின் எல்லா செயல்களுக்கும் இறைத்தூதரின் முன் மாதிரியை வைத்தே செயல்படுவார்கள் என்பது உரிய இடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அனாதைகளின் செல்வத்திற்கே திரும்பத் திரும்ப ஜகாத் வழங்கிய நபித்தோழர்கள் நிச்சயமாக தமது செல்வத்திற்கும் அவ்வாறுதான் ஜகாத் வழங்கி வந்திருப்பார்கள் என்பதில் எள் முனையளவுகூட சந்தேகம் கொள்ள முடியாது.
எனவே, ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்குவதுதான் நபிவழி. இதில் 'ஏற்கனவே வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்' என்ற கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. நபித்தோழர்கள் இதனை தங்களது வாழ்வில் செயல்படுத்தியும் வந்துள்ளனர். எனவே, ஒரே பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்று தனியாகக் கூற வேண்டிய அவசியம் இல்லை.
பாரபட்ச மின்றி சிந்திப்போருக்கும் உண்மையைப் உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுவோருக்கும் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளே போதுமானதாகும். அல்லாஹ் அனைவருக்கும் சத்திய வழியைக் காட்டி, அதன்படி நடப்பதற்கு அவனது பேரருளைப் பொழிந்திட வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம்.

<< Home