மறுப்பு வெளியிட நினைப்போருக்கு!
மறுப்பு வெளியிட நினைப்போரின் கவனத்திற்கு!
ஏகத்துவ மாத இதழான அல் ஜன்னத், ஜகாத் குறித்த சிறப்பு செய்திகளைத் தாங்கி கடந்த டிசம்பரில் வெளியானது. சிலர் சமீபகாலமாக வெளியிட்டு வரும் குழப்பமான செய்திகளைத் தோலுரித்துக் காட்டும் விதத்தில் தக்க சான்றுகளுடன் சரியான மறுப்பாக அமைந்திருந்தது. அல்ஹம்து லில்லாஹ். மறைக்கப்பட்ட பல உண்மைகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தன.
இந்நிலையில் இந்த ஆய்வுக் கட்டுரைக்கான மறுப்பும், விளக்கமும் அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்து வரும் கொள்கைச் சகோதரர்களின் மேலான கவனத்திற்கு!
செல்வத்தைத் தூய்மைப் படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான் (துஹ்ரத்தன் லில் அம்வால்) என்று இறைத்தூதர் கூறியதாக பல மேடைகளில் நீங்கள் முழங்கி வந்த நபிமொழி எந்த நூலில் பதிவாகி உள்ளது? அதைக் கவனத்தில் கொண்டு உங்களது மறுப்பில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவீர்களா?
அவ்வாறு வெளியிட்டால் நாம் ஏற்கனவே அறிவித்திருந்த பரிசான ரூபாய் இரண்டு இலட்சத்தை தரக் காத்திருக்கிறோம். அல்லது நீங்கள் கூறாத செய்தியை இட்டுக்கட்டி நாம் கூறிவருவதாக நிரூபித்தாலும் இரண்டு இலட்சம் பரிசு உண்டு. இவ்வாறு பரிசுகள் அறிவிக்கும் கலையையும் உங்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டோம் என்பதையும் அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்ற தங்கள் வாதத்தை நிலை நிறுத்த குர்ஆன் மற்றும் நபி மொழிகளிலிருந்து சான்றுகள் தரும்படி கேட்டிருந்தோமே, இவர்களது செவிகளுக்கு அது எட்டவில்லையா?. இவர்கள் விட்டுள்ள ஊசிக் கதையும், மூஸா ஈசாவிற்கு பணம் கொடுத்தார் என்ற கதையும் நூலறுந்த பட்டம் போல மக்கள் மன்றத்தில் எடுபடாமலேயே போய்விட்டது.
வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு ஹதீஸைக் காட்டினால் ஒரு இலட்சம் ரூபாய் தருவோம் என்று அறிவித்த இவர்கள், அந்த ஹதீஸை எடுத்துக் காட்டிய போது, தாம் அறிவித்த ஒரு இலட்சம் ரூபாயை எங்கே கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில்கூட இந்த ஹதீஸை ஏற்க மறுக்கிறார்களோ என்னவோ. ஆனால், நாம் அவர்கள் அறிவித்த ஒரு இலட்ச ரூபாயை கேட்க மாட்டோம் என்பதை உறுதியாகத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். மாறாக, உண்மையை ஒப்புக் கொண்டு, அதனை மக்கள் மன்றத்தில் வெளியிடவே விரும்புகிறோம். இவர்களும் இவர்களை முழுமையாக நம்பியுள்ள ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் தங்களது நிலைபாட்டை மாற்றிக் கொண்டு, சத்தியத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதே நன்மையை நாடுவோர் அனைவரின் விருப்பமாகும். வழக்கம் போல் செய்திகளைத் திரித்து மக்களைத் திசை திருப்பும் திருவிளையாடலில் இம்முறையும்; இறங்க வேண்டாம் என இவர்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.
நபித் தோழர்கள் முதல் ஹதீஸ் துறையில் தலைசிறந்து விளங்கிய இன்றைய அறிஞர் அல்பானி வரை அனைவரும் தவறிழைத்துள்ளார்கள் என்று பட்டியலிட்டு எழுதியும், பிரச்சாரமும் செய்து வரும் இவர்கள், தாங்கள் மட்டும் தவறே செய்ய மாட்டோம் என்ற ரீதியில் நடந்து கொள்கிறார்கள். அதனால்தான் இவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போதெல்லாம் அவ்வாறு சுட்டிக்காட்டுவோர் மீது சீறிப்பாய்கிறார்கள். அவதூறுகளை அள்ளி வீசி ஆனந்தம் அடைகிறார்கள். இது அவர்களின் கொள்கைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது.
தொழுகையில் அணிய வேண்டிய ஆடையின்; அளவில் இவர்களின் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டிய போது எகிறிக் குதித்தார்கள். (இது குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரை இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவர உள்ளது. சான்றுகளை இருட்டடிப்புச் செய்து வெளியிட்ட இவர்களின் வாதத்தில் உள்ள முரண்பாட்டினை ஆராய்ந்து உண்மைகள் வெளியிடப்படும்.) ஜகாத் விவகாரத்தில் இவர்கள் இழைத்துள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டிய போதும் இவ்வாறே நடந்து கொண்டார்கள். தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அதனை அடக்கத்தோடு ஏற்று, தங்களைத் திருத்திக் கொள்கின்ற மனப்பக்குவம் இவர்களுக்கு எப்போது வரப் போகிறதோ?
இறையச்சமுடையோருக்கான இறைவன் கூறும் இலக்கணத்தை இறுதியாக இவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.
"அவர்கள் மானக்கேடானவற்றை செய்தாலோ (பாவ காரியங்கள் செய்து) தங்களுக்கு தாங்களே அநீதமிழைத்துக் கொண்டாலோ (உடனே) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, தமது பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவார்கள். தாங்கள் செய்தவற்றில் (தவறு எனத்) தெரிந்து கொண்டே நிலைத்திருக்க மாட்டார்கள்." (அல் குர்ஆன்: 3:135)
அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை புரிய வைத்து, அதனைச் செயல்படுத்தக் கூடியவர்களாகவும் ஆக்கி வைப்பானாக!

<< Home